திருப்புவனத்தில் காவல் துறை விசாரணையின்போது தாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணின் நகை திருடு போன விவகாரத்தில், கோவில் காவலராக பணியாற்றி வரும் அஜித் குமார் உள்ளிட்ட நான்கு பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். அஜித்தை தவிர மற்றவர்களை அனுப்பிவிட்ட போலீசார், அஜித்தை கோவில் வளாகத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை, தனியார் தோட்டம் என வெவ்வேறு இடங்களில் தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இதில் அஜித் குமார் உயிரிழந்தார். உடற்கூராய்வு அறிக்கையில், அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாகவும், அவர் அடுத்து கொல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அஜித் குமாரை தாக்கிய 6 காவலர்கள் கைது செய்யப்பட்டதுடன், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர், அஜித்குமாரின் தாய், சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, இன்று அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அதனோடு அஜித்குமார் குடும்பத்தினரிடம் இலவச வீட்டு மனைக்கான பட்டாவையும் வழங்கினார்.