கோவை சித்தாபுதூர் அரசுப்பள்ளியில் மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என்று கேள்வியோடு விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020ல் மும்மொழி கல்வி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் மும்மொழித்திட்டம் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்றும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள ஆவண செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
எனினும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையல் கோவை மாநகராட்சி அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என மாநகராட்சி பள்ளியின் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவத்தில் கேள்வி இடம்பெற்றுள்ளது.
இதனால் கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய பாடமா என்றும், இந்தி அடங்கிய மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆணையர் ஷர்வன் குமார் இந்தி படிக்க விருப்பமா என்ற கேள்வி தற்போது மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை. கடந்த மே 29ம் தேதி கல்வியாண்டிற்கான விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் விண்ணப்பப் படிவம் முந்தைய ஆண்டிற்கானது. அந்த படிவம் நான் பதவியேற்றபின் வெளியிடப்பட்டதல்ல என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.