tamilnadu

img

இஎஸ்ஐ தொழிலாளர் பிள்ளைகளின் 20 சதவீத மருத்துவப் படிப்பு இடங்களையும் பறிப்பதா? மத்திய அரசின் நடவடிக்கைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

கோயமுத்தூர்:
இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக  ஒதுக்கப்பட்ட 20 சதவிகித மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்ப தாவது: 

இஎஸ்ஐ மருத்துவமனைகள் 1948 தொழிலாளர் காப்பீட்டு சட்டத்தின்கீழ் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை வைத்தே நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், தொழிலாளர்களின் குழந்தைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக காப்பீட்டு நபர் (IP quota) அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, மொத்தம் உள்ள 100 மருத்துவ இடங்களில் 65 இடங்களை மாநில அரசு மூலமும், 15 இடங்கள் மத்திய அரசு மூலமும் நிரப்பப்படும். மீதமுள்ள 20 இடங்கள் இஎஸ்ஐ மருத்துவமனையின் மூலமாக காப்பீடு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப் பட்டு வந்தது.

300 இடங்கள் பறிப்பு 
இந்நிலையில், நீட் தேர்வை கொண்டுவந்து எவ்வாறு ஏழை குழந்தைகளின் மருத்துவக் கனவை மோடி அரசு சிதைத்ததோ, அதேபோல் இஎஸ்ஐ மூலமாக நிரப்பப்பட்டு வந்த காப்பீட்டு நபர் இடஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு முதல் (2020 – 2021) பறித்துள்ளது. அதாவது, மத்திய பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் மூலமாக இனிமேல் அவ்விடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்து இதையும் கபளீகரம்செய்துள்ளது. இதன்மூலம் தொழில் நகரமான கோவைசிங்காநல்லூரில் 32 ஏக்கர் நிலத்தில்ரூ.520 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் சுமார் 35 இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

மோடி அரசின் இந்த வஞ்சக நடவடிக்கையின் மூலம் மாதம் 20 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் பெற்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தங்களால் ஆன பங்களிப்பை கொடுத்து, தங்களதுஉழைப்பின் மூலம் அம்மருத்துவமனை களை உருவாக்கிய தொழிலாளர்களின்  குழந்தைகள் இனிமேல் மருத்துவ கல்வி படிக்க முடியாது என்கிற சூழலை,  இந்த ஒற்றை அறிவிப்பின் மூலம் மோடி அரசு சிதைத்துள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. மத்திய அரசுதொடர்ந்து ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை சீர்குலைக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையையும் பார்க்க வேண்டி யுள்ளது.எனவே, மத்திய அரசு இந்த நடைமுறையை திரும்பப் பெற வேண்டும்.பழைய நடைமுறையை உத்தரவாதப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன். தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களைக் கொண்டே நிரப்ப மாநில அரசும் வலியுறுத்த வேண்டும். 

மேலும், தொழிலாளர்களின் பிள்ளைகளின் மருத்துவக் கல்வியை பறிக்கும் இந்நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசை  நிர்பந்திக்கும் வகையில் தொழிற்சங்கங்கள்,  கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தலையீடு செய்ய வேண்டும் எனவும்  பி.ஆர்.நடராஜன்  கேட்டுக்கொண்டுள்ளார்.