விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் வரவழைத்து டேக்சி ஓட்டுனரை கடுமையாக தாக்கிய கோவை சரவணம்பட்டி போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினர். டேக்சி ஓட்டுனரின் மனைவி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முருகன் மற்றும் அவரது மனைவி கூறுகையில், கோவை கணபதி புதூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து கால் டாக்ஸி ஓட்டுனராக எனது கணவர் முருகன் பணியாற்றி வருகிறார். கோவையில் 10 வருடங்களுக்கு மேலாக கால் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் செவன் காப்ச் என்கிற தனியார் நிறுவன கால் டாக்ஸி உரிமையாளர் பிரபு பேசித்தீர்க்க வேண்டிய வாடகை பிரச்சனையை பூதாகரமாக்கி முருகன் மீது கடந்த மாதம் 28 ஆம்தேதி பொய்யான புகாரை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் முருகனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணைக்கு சென்றவரை ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து முருகன் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் என்னை காவல் நிலையம் வரச்சொல்லி என்னுடன் மயக்க நிலையில் இருந்த எனது கணவரை ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். போலிசார் அடித்ததால் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட எனது கணவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்தான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். எந்த தவறும் செய்யாத எனது கணவரை விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்கியும், பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டிய சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலிசார் மீது சட்டப்பட்டியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாக தெரிவித்தார். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் பாதிக்கப்பட்ட டேக்சி ஓட்டுனருக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.