கோவை புலியகுளம் - சௌரிபாளையம் சாலையில் உள்ள ஏரி மேடு அருகே சிதிலம் அடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கோவை புலியகுளம் சௌரிபாளையம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. காலை நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்குள் ஆகியுள்ளனர். குறிப்பாக புலியகுளம் ஏரி மேடு இறக்கம் அருகே உள்ள சாலையில் பல பகுதிகள் உடைந்த நிலையில் உள்ளது.
இதனால் புலியகுளம் சௌரிபாளையம் சாலையில் ஏரிமேடு அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புலியகுளம் கிளை சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.