tamilnadu

img

குறுங்கோள்கள் கண்டுபிடித்து கோவை அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை

கோவை அரசு பள்ளி மாணவிகள்  குறுங்கோள்களை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இந்த கண்டுபிடிப்பை நாசா அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
கோவை, திருச்சி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் துறை ஆகியவை சார்பில் குறுங்கோள்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பிரமீஷா, சுவேதா ஆகிய 2 பேரும் கடந்த ஜனவரி  28 ஆம் தேதி முதல் பிப்.22 ஆம் தேதி வரை நடந்த குறுங்கோள் கண்டறியும் முகாமில் இணையதளம் மூலம் கலந்து கொண்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அங்கீகரித்து வழங்கிய கணினி செயலி மூலம் 2 குறுங்கோள்களை இந்த மாணவிகள் கண்டறிந்தனர். இதனை நாசா அமைப்பும் அங்கீகரித்துள்ளது. இதன்படி, மாணவிகளின் பங்களிப்பை பாராட்டும் வகையில் விஞ்ஞான் பிரசார் மூலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குறுங்கோள்களை கண்டுபிடித்த மாணவிகள் அதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் காட்டி வாழ்த்து பெற்றனர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், அறிவியல் ஆசிரியை சாய்லட்சுமி, ஆசிரியர்கள் மங்கையர்கரசி, நாகராஜ், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின், குறுங்கோள்கள் இயக்கம் குறித்து  மாணவிகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் கூறுகையில், சூரிய குடும்பத்தில் சூரியன், 8 கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள் தவிர இன்னும் பல கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இதன்படி செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் நிறைய பாறை போன்ற பொருட்கள் சூரியனை சுற்றி வரும். இவை ஆஸ்டிராய்டுகள் எனப்படும் குறுங்கோள்களாகும். பொதுவாக சுமார் 10 மீட்டர் அளவு உள்ள சிறிய கற்கள் அளவில் இருந்து பெரிய மலை போன்ற அளவிலும் இவை உள்ளன. இவை பூமியின் சுற்றுவட்ட பாதையில் குறுக்கிடும்போது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. சிறிய அளவில் இருக்கும் கோள்கள் காற்றில் உராய்ந்து தீப்பிடித்து எரிந்து காணாமல் போய்விடுகின்றன. ஆனால், அளவில் பெரிதாக இருக்கும் கோள்கள் பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
கடந்த 1908 ஜூன் 30 ஆம் தேதி சைபீரீயாவை பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கியதால் அந்த பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் தேதி குறுங்கோள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குறுங்கோள்களுக்கு முதலில் ரோமானிய புராணப் பெயர்கள்தான் வைக்கப்பட்டன. இந்தியாவில் முதலில் கண்டுபிடித்த கோளுக்கு 'ஏசியா' என்று பெயரிடப்பட்டது. தற்போது பெயர் வைக்கும் முறை கைவிடப்பட்டு அதற்கு பதிலாக ஒரு அட்டவணை ஏற்படுத்தி எண் வரிசை தரப்படுகிறது. இதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஸெரிஸ் துணைக்கோளுக்கு அட்டவணை எண் 1 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன்படி மாணவிகள் கண்டுபிடித்த குறும் கோள்களுக்கு பி.ஜெ.யு.001, பி.ஜெ.யு.002 என்று பெயரிடப்பட்டு உள்ளது.
குறுங்கோள்கள் குறித்து மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் உள்ள இந்த குறுங்கோள்களை கண்டறியும் பணிகள் நாசா தலைமையில் தீவிரமாக நடந்து வருகின்றன. குறுங்கோள்களை கண்டுபிடித்தால் அவற்றின் பயண வேகத்தை அறிந்து கொண்டு பூமியை நோக்கி வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம். மேலும் குறுங்கோள்களில் உள்ள தாதுப்பொருட்களை கண்டுபிடித்து அவற்றையும் பூமிக்கு கொண்டு வரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த மாணவிகள் ஏற்கனவே தேசிய திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் வானியல் சம்பந்தமான படிப்புகள் படிக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாணவிகள் வேண்டுகோளுக்கிணங்க மாணவிகள் படிக்கும் பள்ளிக்கு தொலைநோக்கி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உறுதியளித்துள்ளார்.