நியூஸி-க்கு எதிரான டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 கணக்கில் வென்ற இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியிடம் பறிகொடுத்தது. இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி பகுதியான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (வெல்லிங்டன்) நியூஸி லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் நகரில் சனியன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸி லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 7 ரன்கள் கூடுதலுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வழக்கம் போல திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 124 ரன் களுக்கு சுருண்டது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடக்க வீரர் களின் (லதாம் (52 ரன்கள்), பிளண்டெல் (55 ரன்கள்)) சிறப்பான ஆட்டத்தால் 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூஸி லாந்து அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வெல்லும் அணியாகக் கணிக்கப்படும் இந்திய அணி நியூஸிலாந்து அணி யிடம் ஒயிட் வாஷ் ஆனது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.