tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் கே.வரதராசன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போது மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்துவரும் தோழர் கே.வரதராசன் அவர்களது மறைவுச் செய்தி கேட்டு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அவர், சுவாசப் பிரச்சனை காரணமாக, சனிக்கிழமை மதியம் 2 மணியளவில், கரூரில் மரணம் அடைந்துள்ளார். அவர் தன் மகனைக் காண்பதற்காக கரூர் சென்றிருந்தார். சமூக முடக்கத்தின் காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். அவருக்குத் தற்போது வயது 74.

நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த பட்டயப் பொறியாளரான தோழர் கே. வரதராசன் 1970இல் கட்சியில் சேர்ந்தார். 1978இல் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு 6 உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1986இல் மாநில செயற்குழுவிற்கு உயர்ந்தார். 1998இல் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2002இல் மத்திய செயலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005இல் நடைபெற்ற கட்சியின் 18ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தில்லியில் கட்சி மையத்திலிருந்து மத்திய செயலக உறுப்பினராகவும் பின்னர் 2005 முதல் 2015 வரையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.   

1986இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் கே. வரதராசன், 1998இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவர்.  

தோழர் கே. வரதராசன் அவசரநிலைக் காலத்தில், ஈராண்டு காலம் கட்சியில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். அப்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தோழர் கே.வரதராசன், எவருடனும் மிகவும் எளிதாக நெருங்கிப் பழகக்கூடிய ஒரு தோழர். மிகவும் எளிமையானவர். அவரின் தேவைகள் என்பவை மிகவும் சொற்பமாகும்.

அவரது  நினைவுக்கு அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது. இதயங்கனிந்த இரங்கல்களை அவருடைய மகள், மகன் மற்றும் குடும்பத்தாருக்கு அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள இரங்கல் செய்தியிலிருந்து...

;