tamilnadu

அதிமுக செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர்: ஜோதிமணி மீண்டும் புகார்

கரூர், ஏப். 26- கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார். கரூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டம் முடிந்ததும், கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர். அங்கு அமைத்துள்ள கம்பி வலை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பதை நீண்ட நேரமாக ஆய்வு செய்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடனிருந்தனர்.அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-வழக்கத்தில் இல்லாத அளவில் ஒரு தேர்தல் அதிகாரியும் ஆட்சியரும் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தி வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்டச் செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்.தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகார் மீது உடனே அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆட்சியரும், எஸ்.பி.யும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஆட்சியரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.

;