தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது இரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவது உயிரிழப்பாக 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.
அவர் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். அவர் அங்கிருந்து திரும்பிய பின்னர் தான் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறினர்.