மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த கோரிய வழக்கில், அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திடீரென பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகினர். இதனால், முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி முதல்வர் கமல்நாத்துக்கு கடிதம் அனுப்பினார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று கூடிய மத்திய பிரதேச சட்டப்பேரவை, ஆளுநர் உரைக்கு பிறகு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 26-ஆம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை இன்று, விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹேமந்த் குப்தா அமர்வு, மனு தொடர்பாக சபாநாயகர், முதலமைச்சர் கமல்நாத் மற்றும் அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.