ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலியாகினர் மற்றும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் இன்று தற்கொலைப்படையினரால் கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி உள்பட 5 பேர் பலியாகினர். மேலும், வெளிநாட்டு பாதுகாப்புப்படையைச் சார்ந்த வீரர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து பேசிய காவல்படை செய்தித்தொடர்பாளர் ஃபிர்தவாஸ் ஃபராமர்ஸ் கூறுகையில், காபுல் நகரின் யகாடூட் பகுதியில் காலை 8.45 மணிக்கு பாதுகாப்புப்படையுடன் சர்வதேச அமைப்பு ஒன்றின் வாகனம் அப்பகுதியை கடக்கும்போது தற்கொலைப்படையினர் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் இரண்டாவது முறையாக தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.