வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர்களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று எனக் கூறும் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்கள் இது தொடர்பாக செய்தியொன்றைத் தருகிறார். சபா பருவத்திலே சூது போர்ச் சருக்கத்தில் தருமபுத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்த பிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்துவரும் வண்ணம் தன் தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகிறான். இந்நிகழ்வை கைச் செண்டால் அவள்பைங் குழல் பற்றித் தீண்டா னாகிச் செல்கின்றான் என்று வில்லிபுத்தூரார் சொல்கின்றார். கையைப் பிடிக்காமல் கைச் செண்டால் பற்றிச் சென்றானா? என்ற கேள்வி உ.வே.சா உட்பட அனைவருக்கும் எழக்கூடியதுதான்.
துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டால் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என பல்வேறுபட்ட ஐயங்களுக்குள்ளான உ.வே,சா பின்னர் மற்றொரு தருணத்தில் விடை கிடைத்தது பற்றிய விவரங்களை அளிக்கிறார். மாயூரம் அருகில் உள்ள ஆறுபாதியில் உள்ள ராஜகோபாலப் பெருமாள் ஆலயம் சென்றபோது பெருமாளின் திருக்கரத்தில் பிரம்பைப் போல ஒன்று காணப்பட்டது, அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகள் இருந்தன, நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை. ஆதலால் என்ன என்று கேட்டேன். அதுதான் செண்டு என்று அவர் கூறினார். என் மனக்கண் முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றியிழுக்கும் காட்சி வந்தது என்கிறார் உ.வே.சா.
இந்த பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளும் ஒரே அச்சு என்பதையும் அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உள்ளதால் செண்டலங்காரப் பெருமாள் என்று அவர் திருநாமம் வழங்குவதையும் தமிழ்த்தாத்தா அவர்கள் அறிந்து மகிழ்வடைந்துள்ளார்,
இந்த மன்னார்குடி செண்டலங்கார பெருமாளைப் பூசித்து வரக்கூடிய மரபில் உள்ள ஜீயர் ஒருவரின் சமீபத்திய செயல்பாடு தேசம், இறையுணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் மகிழ்வளிக்கக்கூடியதல்ல, செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் எனும் திருப்பெயரைக் கொண்டுள்ள இவர் காந்திஜி கொலை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றியுள்ளது அச்சத்தையும் பீதியையும் மக்கள் மனதில் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாதுராம் வினாயக் கோட்சே முதல் இந்து தீவிரவாதி என்பதை இந்த தேசத்தில் உள்ளோர் மட்டுமின்றி எந்த தேசத்தில் இருப்போரும் அறிந்ததே என்பதால் மறுக்கவும் முடியாது. எனவே எச்சரிக்கை விடுத்துள்ளதோடு தெருவில் நடமாட அனுமதிக்கக்கூடாது என்று அச்சுறுத்தியும் வருகிறார், போகிற போக்கில் காந்திஜியைப் போன்றே கோட்சேயும் தேசபக்தர் என்றும் உளறிக் கொட்டியுள்ளார். ஏற்கனவே வைரமுத்து விவகாரத்தில் ஒரு ஜீயர் சோடா பாட்டில் உடைப்பேன் என்று சொன்னதை நாம் லேசில் மறக்கலாகாது,
மதத்தை பின்பற்றி வருகின்ற கோடானுகோடிப் பேரை தவறான வழியில் அழைத்துச் செல்லும் ஜீயர்களும் இதர சாமியார் வகையறாக்களும் தங்களது நடவடிக்ககைள் ஸர்வ ஜன சுகினோ பவந்து என்று இவர்களே அடிக்கடி கொட்டாவி விட்டபடி கூறும் கோட்பாட்டிற்கு எதிராக அமைந்துள்ளது என்பதை அறியத் தவறுகிறார்கள்.
தேச விடுதலைக்குப் பின்னர் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே அவநம்பிக்கை இருந்து வந்த நேரத்தில் மக்களை இணைத்திட மகத்தான முயற்சியை காந்திஜி மேற்கொண்டதை எவரும் மறந்துவிட முடியாது, இதுவே அவரது கொலைக்கான பிரதான காரணியாகவும் அமைந்து விட்டது, அன்றைய தினம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் மததீவிரவாத சக்திகள் பற்றி குறைத்து மதிப்பீடு செய்ததும் அதன் தொடர்ச்சியான நடைமுறைகளும் இதை சுலபமாக்கியது. காந்திஜி தான் விரும்பிய ராமரை பிரார்த்தனை செய்கின்ற தருவாயில்தான் மற்றொரு இந்து நாதுராம் கோட்சேயினால் சுடப்பட்டிருக்கிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது, அர்த்தம் பொதிந்தது.
அன்றைய தினம் காந்திஜியின் கொலை மதக் கலவரத்திற்கு இட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தில் ஜனநாயக சக்திகள் இதை தடுக்கும் வகையில் கொலை பற்றி மக்களிடையே உடனடியாக பிரச்சாரத்தை மேற்கொண்டதை மறந்துவிடலாகாது. சென்னை நகரில் திறந்த ஜீப்பொன்றில் ஒலிபெருக்கி சாதனம் ஒன்றை கட்டிக் கொண்டு மறைந்த தோழர்கள் மாயாண்டி பாரதியும் வி,பிசிந்தனும் காந்தியடிகள் நாதுராம் வினாயக் கோட்சேயின் துப்பாக்கிக்கு இரையானார், கொலை செய்தவர் இந்து என்று திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், மயிலை போன்ற பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டதன் காரணமாக பதற்றம் தணிந்திருந்தது என்றே சொல்ல முடியும்,
காந்திஜி கொலையுற்றதும் அகில இந்திய வானொலியில் கொலை செய்தவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சித்பாவன பிராமணர் நாதுராம் வினாயக் கோட்சே என்றுதான் முதலில் தகவல் தந்திருக்கின்றனர் பின்னரே இந்து கோட்சேயின் துப்பாக்கிக்கு பலியானாதை தொடர்ந்து அறிவித்து வந்திருக்கின்றனர்.
உண்மை நிலை இப்படியிருக்க செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் வெறுப்பு அரசியலில் குதித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது, ராஜகோபாலப் பெருமாள் கையில் உள்ள செண்டு சாதாரண ஆயுதமல்ல, வீசியவரையே திருப்பித் தாக்கி அழிக்கக்கூடிய பேராயுதமாகும், அன்னாளில் இருந்த தமிழ்ச் சூழலில் இறையுணர்வு கொண்டோர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வேண்டாம் என்ற கருத்தின் பேரில் பெருமாள் கையில் அணிசேர்த்திருக்க்கூடிய இந்த செண்டை ஆங்கிலத்தில் பூமராங் என்று சொல்வர், ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வேட்டைக்கான மோசமான ஆயுதம் இது, தவறும் பட்சத்தில் ஏவியவர் தாக்குதலுக்குள்ளாவதோடு கடுமையாக பாதிக்கப்படுவது வரலாறு,
எனவே ராஜகோபாலஸ்வாமி பாதங்களிலிருந்து மலரை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பதற்கு பதில் இறையுணர்வு கொண்டோர் மத்தியில் பேதத்தை, பிளவை ஏற்படுத்தும் செயலாக செண்டாலங்கார சம்பத்குமார் ஜீயர் கைச்செண்டை வீசுவது மடத்திற்கு இன்னொரு ஜீயரை தேடுவதாக அமைந்திடக்கூடும் என்பதோடன்றி பாரம்பரியம் மிக்க செண்டாலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் என்பது மாறி நாதுராம் வினாயக் கோட்சே மடம்/ஜீயர் என்ற அவப்பெயரை மன்னார்குடி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே பெற்றிடும் அபாயமும் இருக்கிறது.