tamilnadu

சீர்காழி மற்றும் முசிறி முக்கிய செய்திகள்

தாசில்தார் திடீர் இடமாற்றம்  

சீர்காழி, ஜூன் 28- நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், கடந்த தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் வராத பெட்ரோல் டோக்கன்களை அப்போது தேர்தல் அலுவலராக இருந்த மண்டல துணை தாசில்தார் சாமிநாதன் திடீர் ஆய்வு செய்து பறிமுதல் செய்தார். இந்நிலையில் மண்டல துணை தாசில்தார் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க நிர்வாகிகள் அழுத்தத்தால் சாமிநாதன் இடமாற்றல் செய்யப்பட்டிருந்தது பழிவாங்கும் செயல் ஆகும். எனவே இந்த மாறுதல் ஆணையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் என்றார். 

இலவச மருத்துவ முகாம்

தரங்கம்பாடி, ஜூன் 28- நாகை மாவட்டம் பொறையார் இச்சிலடியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவர் பக்ருதீன் கலந்து கொண்டார். நீரிழிவு நோய், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்கப்பட்டது. பெட்சி எலிசபெத் டிரஸ்ட் இணைந்து நடத்திய முகாமில் பேராசிரியர் தேவசகாயம், மருந்தாளுநர் மரியா மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முசிறியில் 300 ஆண்டு பழமையான    கொடுங்கை சிற்பங்கள் கண்டுபிடிப்பு  

முசிறி, ஜூன் 28- திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மண்பறை கிராமத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் பாபு, பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ஆய்வாளர் பாபு கூறுகையில், தமிழக கோயில்களில் கட்டுமான அமைப்பில் நாயக்கர் மன்னர்களது கலை நுட்பம் சிறப்பானதாக கருதப்படுகிறது. அவர்களின் கட்டுமான தொழில் நுட்பங்களை இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் காணலாம். அந்த வகையில் முசிறி அருகே மண்பறை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் கருவறை விமானம் அதன் சிற்பங்கள் சுண்ணாம்பு, மண்டபம் கருங்கல் கட்டுமான அமைப்பையும் கொண்டது. இம்மண்டபத்தினுடைய கொடுங்கையின் மேல்புறத்தில் குரங்கு ஒன்று தன் முன்னங்கால்களை தரையில் ஊன்றியும், பின்னங்கால் முன்னோக்கி உடலை உந்தியபடியும் நீர் அருந்த முயற்சிப்பதை போன்று புடைப்பு சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது சிற்பியின் கலை உணர்வின் நுட்பமான வெளிப்பாடாகும்.  மேலும் முற்காலத்தில் இக்கோயில் அமைந்துள்ள இடம் வனப்பகுதியாக இருந்திருக்கலாம். தமிழக கோயில்களில் கொடுங்கை சிற்பங்களை(கொடுங்கை என்பது கோயில் மேல்தளத்தில் விழும் மழைநீர் பக்கவாட்டு சுவரில் விழாமல் இருக்க அமைக்கப்படுவதாகும்) அமைக்கும் முறை நாயக்கர் காலத்தில் உருவானதாகும். . இவ்வாறான கொடுங்கை சிற்பங்களை ஸ்ரீ வைகுண்டம் கோயிலில் காணலாம். இத்தகைய சிற்பங்கள்  பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இச்சிற்பம் சுமார் 300 ஆண்டு க்கு மேல் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு  சீருடை

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ பவுன்ராஜ் சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், புஷ்பலதா, தலைமை ஆசிரியர் ரேவதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.