tamilnadu

இருசக்கர வாகனம் வாங்கும்போது தலைக்கவசம் வழங்க போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

திருப்பூர், ஜூன் 6–தமிழகத்தில் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கும் நுகர்வோருக்கு அத்துடன் இலவசமாக தலைக்கவசம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில போக்குவரத்து ஆணையர் அனைத்து மாவட்ட போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இதைக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.இதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த மார்ச் 28ஆம் தேதி போக்குவரத்து ஆணையர், அனைத்து மண்டல துணை ஆணையர்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் புதிய இருசக்கர வாகனம் வாங்கும்போது விநியோகஸ்தர்கள் அந்த வாகனத்துடன் தலைக்கவசமும் வழங்குகிறார்களா என ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கோவை உட்பட தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் புதிய வாகனம் விற்கும்போது தலைக்கவசம் இலவசமாக வழங்குவதில்லை. எனவே இருசக்கர வாகனம் விற்பனை செய்வோர் தலைக்கவசம் அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக நுகர்வோர் அமைப்புகள், பல்வேறு மாவட்டங்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் இருசக்கர வாகனங்கள் விற்கும் விநியோகஸ்தர்கள் இலவசமாக தலைக்கவசம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.