மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் அவரின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொற்கொடி தொடங்கியிருக்கிறார்.
அத்துடன், கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த கொடியில் யானை தனது தும்பிக்கையில் பேனா வைத்திருப்பது போன்ற சின்னம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்பட்டிருந்தார்.