தஞ்சாவூர், செப்.1- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் பகுதிகளை பார்வையிடுவதற்கு வருகை தந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.,யிடம், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ.அகமது அலி ஜாபர் அளித்த கோரிக்கை மனுவில், காரைக்குடி- திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்தை உடனடியாக இயக்கவும், இவ்வழித்தடத்தில் காலியாக உள்ள கேட் கீப்பர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருந்தார். மனுவை பெற்றுக் கொண்டு, வரும் 03-ம் தேதி அன்று தெற்கு ரயில்வே திருச்சி மண்டல வர்த்தக மேலாளரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், கோரிக்கை பற்றி எடுத்துக் கூறி, அதன் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.எச்.அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், அதிரை அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஏ.முகமது அப்துல் காதர், ரோட்டரி சங்க டி.முகமது நவாஸ்கான், திமுகவை சேர்ந்த கோடி முதலி, முல்லை ஆர்.மதி, இன்பநாதன், எம்.பகுருதீன், எஸ்.கார்த்திகேயன்(காங்கிரஸ்), ஏ.சாகுல் ஹமீது(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), என்.காளிதாஸ்(இந்திய கம்யூனிஸ்ட்) கலந்து கொண்டனர்.