சேலத்தில் தண்ணீர் தொட்டியில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர் தோப்பூர் பூக்கொடி தம்பதியினரின் குழந்தை தமிழரசு. இந்நிலையில் தாத்தா பழனி அதே பகுதியில் உள்ள கோட்டை மேடு என்ற இடத்தில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது கயிறு திரிக்கும் மில்லில் வேலை செய்து வருகிறார். பழனி வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றபோது தமிழரசு அழுததால் தன்னுடன் அழைத்துச் சென்று ஓரமாக உட்கார வைத்துவிட்டு கயிறு திரிக்கும்வேலை செய்து வந்தார்.
அப்போது தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. கயிறு திரிக்கும் இயந்திரத்தின் சத்தத்தால் குழந்தை தொட்டிக்கு விழுந்தது தெரியவில்லை. வெகுநேரம் கழித்து குழந்தையை காணவில்லை என பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டியில் குழந்தை இருந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தையை மீட்டு தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அங்கே முதலுதவி சிகிச்சைகள் முடிந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.