tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்க கோரி பூங்கா ஊழியர்கள் போராட்டம்!

தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி உதகை தாவரவியல் பூங்காவிற்குள் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவப்படி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 

டான்ஹோடா பண்ணை பணியாளர்களை தமிழ் நாடு அரசு நிதித்துறை ஆணை எண் எம்.எஸ். எண் 287-ன்படி பண்ணை பணியாளர்களாக அங்கிரிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியார்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா முன் பண்ணை பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மோகன்குமார், கருணைராஜ், வாசு, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ணை தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில், பொருளாளர் உண்ணிகிருஷ்ணன் நன்றி கூறினார்.