தமிழின் சிறப்பு! - தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்
கண்ணே கனியே கண்மணிச் சுடரே கருத்தாய் நாளும் படிப்பாய்!-இரவில் விண்ணில் தோன்றும் வெண்ணில வாக வெளிச்சம் தன்னைக் கொடுப்பாய்! பொன்னே! மணியே! பூவின் இதழே! புன்னகை சிந்திடு நீயும் - நம் அன்னைத் தமிழில் அழகாய்ப் பேச அன்பாய் அணைப்பாள் தாயும்! திருக்குறள் கற்றுத் தெளிவுடன் விளங்கத் தீமைகள் எல்லாம் ஒழியும்!-வாழ்வில் பெருமைகள் சேரும் பேரும் கிட்டும் பெற்றோர் மனமும் மகிழும்! பாரதி, பாரதி தாசன் பாட்டைப் படித்தே பாங்காய்ப் பாடு!-நெஞ்சில் ஈரம் துளிர்க்கும் எழுச்சி பிறக்கும் ஈடிலா நம்தமிழ் நாடு! பலவாம் மொழிக்கும் பைந்தமிழ்த் தாயாம் படித்தே அறிவாய்ப் பிறப்பை! - இந்த உலகில் தமிழ்போல் ஒருமொழி இல்லை உணர்வாய்த் தமிழின் சிறப்பை!
