tamilnadu

மதம் எதிர் மதம்


மதம் மனிதனுக்’குள்’ இருக்கும்வரை 
    மனிதம் தழைக்கிறது; அதே
மதம் வீதிக்கு வரும்போது மனிதநேயம் மறைகிறது;
வெறுப்புணர்வு வளர்கிறது;
“மதம்” பிடித்த யானை காட்டுக்குள் அரிது,
ஆனால் “மதம்” பிடித்த மனிதர்கள்
    நாட்டுக்குள் அதிகம்.
“மதம்” பிடித்த யானைக்குத் தேவை தனிமை;
“மதம்” பிடித்த மனிதனுக்குத் தேவை கூட்டம்.

எந்த மதம் என்றாலும் மனிதம் 
    இல்லையென்றால்; அது
வீரியமற்ற விதை; விருட்சத்தை உருவாக்காது.
மதம் வேறு என்றாலும் மனிதம் தான்
அனைத்துக்கும் அடிப்படை.
மதம் மனிதமாய் மாறுவதற்கு
இடையில் ஒரு மெல்லினத்தைச் சேர்த்து “இ” 
    என்ற புன்னகையைச்
சேர்த்தால் போதும், மென்மையான புன்னகை.

விதவிதமாய் இருந்தாலும்
ஒருவிதமாய் ஒருமைப்பாடு காப்பதுதான்
இந்திய துணைக் கண்டம்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்றாலும்
ஒருபான்னையினர்தான் அனைவரும்!
இயற்கைப்பேரழிவு வரும்போது குல்லாவையும் 
தலைப்பாகையையும் வேறுபடுத்துவதில்லை!

மனிதனுக்கு மனிதனை ஞாபகப்படுத்த அவ்வப்போது 
இயற்கை பேரிடர் வரவேண்டுமோ? 
    வேண்டியதில்லை!
கிளையில் இருந்து கொண்டு அதுதான் உலகம் என்று
மரத்தின் அடியை அறுப்பது போல -
மதத்தினால் மதத்தைக் கொண்டு 
மனிதத்தை அளிக்க நினைப்பது 
    மனித குலத்தையே கருவறுப்பதற்கு சமம்.

வெடிக்கச் செய்வது வீரமல்ல, 
வெடித்துச் சிதறுவது பொருட்கள் மட்டுமல்ல;
கட்டிக் காத்த சமூகக் கட்டமைப்பும் கூட,
வெடிப்பு மூலம் வெறுப்பைத் தான் பெற முடியும் -
படிப்பு மூலம் பகுத்தறிவைத் தேடு.
“படிப்பு” வெடிப்பை செய்வதற்கல்ல.
வெடிக்கச் செய்ய வேண்டியது மனித வெறுப்பை.

தாக்குவது தற்காப்பல்ல,
தாக்குண்டவன் தருணம் பார்ப்பான் திருப்பித் தாக்க -
அதனால் -
தாக்குவது சரியான தர்க்கம் அல்ல.

இறை நம்பிக்கை இயற்கை நிகழ்வு -அது
பரிணாம வளர்ச்சியில் பயத்தின் 
அடிப்படையில் வந்தது.
ஆனால் இறைவன் பெயரில் எதுவும்
செய்வோம் என்பது மூட நம்பிக்கை -
அது கடவுளின் பெயரால் “கடை” நடத்துவது 
வியாபாரமயமாக்கல். 
கடவுளின் பெயரால் கருணை வளர்ப்பது -
கடவுள் பணியாம் காக்கும் பணி - அது
உலகம் உய்ய செய்வது.
கடவுளின் பெயரால் காவு வாங்குவது -
கடவுள் பணியன்று, “காலன்” பணி - அது
உலகம் உதிரச் செய்வது.

இறைவன் பெயரால் இரக்கம் சுரப்பது இயற்கை -
அது குட்டி ஈன்ற தாய் மடி சுரப்பது போன்றது -
அது மனித குலம் வளர்க்கும் மாண்பு.
இறைவன் பெயரால் “இரத்தம்” குடிப்பது
சமூக வளர்ச்சியில் பின்னோக்கிய பயணம்.
கடைசியில் மிஞ்சப் போவது யாருமில்லை.

ஆகவே நண்பர்களே!
கடவுள் பெயரால் கருணை செய்வோம்,
காதல் செய்வோம்!
இறைவன் பெயரால் இனியவை செய்வோம்,
இன்னாதவை மறப்போம்.
உலகம் உய்ய உறவுகளை வளர்ப்போம்,
மனித உறவுகளை உயர்த்துவோம்.”  
வி.பாலகிருஷ்ணன் 
கோவை மாநகர காவல் ஆணையர்