மதுரையில் தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் 30.10.2023 அன்று தொடங்கி வைத்தார்.
கோரிப்பாளையம் சந்திப்பானது மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மிக முக்கிய சந்திப்பாகும். இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து, வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் 1305 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை மொத்தம் 39 மேல்தளப் பணிகள் (Deck Slab) அமைக்கப்பட்டுள்ளது.
தமுக்கம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை சேவைச் சாலை பாலத்தின் இடதுபுறத்தில் 7.50 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழிதடமாகவும், வலது பகுதியில் 10.50 மீட்டர் அகலத்திற்கு மூன்று வழிதடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சேவைச்சாலையின் எல்லையில் மழைநீர் வடிகால் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்காக தனி வழிதடம் அமைக்கப்பட்டுள்ளது.
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை பாலத்தின் அணுகு சாலை அமைத்தல், பாலத்தின் கீழ் இருபுறமும் சேவைச் சாலை அமைத்தல், வர்ணம் பூசுதல், மின்விளக்கு பொருத்துதல் மற்றும் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான பிரதான மேம்பாலம் 213 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, இப்பாலத்திற்கு முதலமைச்சரால் 16.2.2026 அன்று "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்" என்று பெயர் சூட்டப்பட்டது. இச்சிறப்புமிக்க பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை நகரின் மிகப் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்ட இம்மேம்பாலம், செல்லூர். தல்லாகுளம். தமுக்கம், நெல்பேட்டை, அண்ணாநகர் மற்றும் மதுரை மத்திய பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்தை எளிதாக்கி, பொதுமக்களின் பயண நேரத்தை குறைப்பதுடன், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. மேலும், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் விரைவாகச் செல்ல வழிவகுப்பதன் மூலம் நகரின் மொத்த போக்குவரத்து திறன் மற்றும் நகர்ப்புற இணைப்பை மேம்படுத்துகிறது.