tamilnadu

img

“அய்ய்..  சொப்பு சாமான்” கணேஷ்

ஆசிரியரின் கையில் புதியதொரு பையைப் பார்த்தவுடன் மாணவர்கள் கண்கள் விரிந்தன.
ஆசிரியரோ, “வாரிசு பார்த்தாச்சா?” என்று வினா எழுப்பியவுடன், பையில் இருந்து கண்கள் நகர்ந்தன. முக மலர்ச்சியுடன் கைகளை உயர்த்தினார்கள்.
“யாரோட வாரிசப் பாத்தீங்க...”  
“வாரிசு படம் பாத்தோம்” என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததைப்போன்று விடை வந்தது. “தியேட்டர்ல போய்ப் பாத்தோம்” என்றபோது சிரிப்பொலியில் கிண்டல் தெறித்தது.
“அருமை... வாரிசு படம் பார்த்தோம் என்பதை வாரிசு பார்த்தோம்னு சுருக்குறோம்.. இத ஆகுபெயர்னு இலக்கணத்துல சொல்றோம். 16 வகையான ஆகுபெயர் இருக்கு... மறக்காம வீட்டுல போய்ப்படிங்க..”
“எங்க சார் வீட்டுல போய்ப் படிக்குறது” என்றொரு மாணவர் சொன்னார்.
“வீட்டுல போய் என்ன பண்ணுவீங்க...” 
“நாந்தான் முதல்ல வீட்டுக்குப் போவேன். பால் காய்ச்சுறது என்னோட வேலை..”
“ஓ... அடுப்பு பத்த வெக்கத் தெரியுமா?” என்று பக்கத்தில் இருந்த மாணவி
கிண்டலடித்தார்.
“அடுப்புனா இதுவா” என்று கேட்டுக்கொண்டே ஆசிரியர் பையைத் திறக்கத்தொடங்கியவுடன், மாணவர்களின் உதடுகளில் புன்முறுவல்.
வெளியே எடுத்த பொருட்களைப் பார்த்தவுடன், “அய்ய்... சொப்பு சாமான்”
என்றார் ஒரு மாணவி. 
ஆசிரியர் எடுத்து வைத்த “சொப்பு சாமான்களில்” சமையலறைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. 
கேஸ் சிலிண்டரைக் காட்டிய ஒரு மாணவி, “எங்க வீட்லயும் இதுதான்” என்றார். 
இன்னொரு மாணவரோ, “எங்க வீட்ல என்னாச்சு தெரியுமா?” என்றவுடன் கண்கள் அவரை நோக்கித் திரும்பின.
“எங்க அம்மா அடுப்புல தண்ணி வெச்சுருந்தாங்க. கொதிச்சப்ப தண்ணி
பாத்திரத்துல இருந்து அடுப்புல சிந்தி, தீ அணைஞ்சு போச்சு... அப்போ அம்மா சமையலறைல இல்ல..”
“அய்யோ... அப்புறம் என்னாச்சு” என்றார் மற்றொரு மாணவி.
“குப்”னு வாடை வந்துச்சு... போய்ப்பாத்துட்டு அடுப்ப அணைச்சுட்டாங்க..”
“நல்லவேளை, கேஸ்ல வாடை வந்துச்சு..”
தலையிட்ட ஆசிரியர், “சிலிண்டர்க்குள்ள என்ன இருக்கு..?” என்றார்.
கோரசாக, “கேஸ்” என்றார்கள். 
“என்ன கேஸ்” என்றவுடன், “படிச்சேன்... நினைவுக்கு வரல” என்றார் ஒருவர்.
“புரோபேன்” என்று ஆசிரியர் சொன்னவுடன், “நானும் அதத்தான் நெனச்சேன்” என்றார் அவர்.  அதைக்கேட்ட மற்ற மாணவர்கள் சிரித்தனர். 
“புரோபேனுக்கு வாசம் உண்டா” என்றவுடன், “ஆமாம்” என்பதற்கு அறிகுறியாக தலையாட்டினர்.
எப்புடித் தெரியும் என்றதற்கு, “அதான் கசிஞ்சா வாடை வருதே” என்றனர்.
“புரோபேனுக்கு வாசம் இல்லை” என்ற குண்டை ஆசிரியர் வீசியவுடன்,  அசைந்து நாற்காலியில் நன்றாக உட்கார்ந்தார்கள்.
“அதுல வாசம் இல்லாததுனால, ஈதைல் மெர்காப்டன்னு ஒரு வாயுவை சிலிண்டர்க்கு உள்ள செலுத்துறோம். அதுக்கு வாசம் உண்டு. கசிஞ்சா அந்த வாசம்தான் வருது..”
“சார்... இப்போ நல்ல வாசம் ஒண்ணு வருதே..” 
“சாம்பார் வாசம்தான.. நம்ம சமையல்கார ஆயா நல்லா வெக்குறாங்க... ஆனா, இன்னும் மணியடிக்கலையே” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மணி ஒலிக்கத் தொடங்கியது.