தில்லி காய்ச்சல்... அடகு வைக்கப்பட்ட ‘இலை’!
விமான நிலைய ‘மியூசிகல் சேர்’ அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார். அடுத்த சில மணிநேரத்திலேயே அமமுகவின் டிடிவி தினகரனும், பாமகவின் அன்புமணி ராமதாஸும் தில்லிக்கு விமானம் ஏறினார்கள். இதைப் பார்த்தால், யாருக்கு எந்தத் தொகுதி என்பதை விட, யார் முதலில் அமித் ஷா வீட்டு வாசலில் போய் ‘சலாம்’ போடுவது என்பதில் தான் பெரிய போட்டியே நடக்கும் போலிருக்கிறது. தினகரனின் ‘பய’ மெக்கானிசம் விமான நிலையத்தில் பேட்டியளித்த தினகரன், “எங்கள் தலைவர்கள் தில்லிக்குச் சென்றாலே மற்றவர்களுக்குப் பயம் வந்துவிடுகிறது” என்று சொன்னவுடன், அங்கிருந்த பத்திரிகையாளர்களே ‘குபீர்’ எனச் சிரித்துவிட்டனர். தில்லிக்குச் சென்றால் சீட் கிடைக்குமோ இல்லையோ, யாரையாவது ‘பயம்’ என்று சொல்லி வம்பிழுக்காவிட்டால் தினகரனுக்குத் தூக்கமே வராது போல! “நான் என்ன தொகுதி கேட்டேன்னு எனக்கும் அமித் ஷாவுக்கும் தான் தெரியும்” என்று அவர் ஒரு மெகா ரகசியத்தை உடைத்துள்ளார். ஒருவேளை தில்லியில் இருக்கும் ஏதாவது ஒரு தொகுதியைக் கேட்டுவிட்டாரோ என்னவோ? தில்லி குளிரும்... ரத்தத்தின் ரத்தங்களின் கொதிப்பும் அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் தில்லிக்குச் சென்று வருவதைப் பார்த்தால், அது தொகுதிப் பங்கீடு போலத் தெரியவில்லை; தில்லி குளிருக்கு ஒரு சுற்றுலா சென்று வருவது போலவே இருக்கிறது. அமித் ஷா வீட்டின் முன்பு ‘வெயிட்டிங்’ போர்டுக்குப் பின்னால் இவர்கள் காத்துக் கிடப்பதன் மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜக தான் எஜமான் என்பதை அமித் ஷா அப்பட்டமாக உணர்த்திக் கொண்டிருக்கிறார். தொண்டர்களின் குமுறல் “எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நடத்திய ஒரு இயக்கத்தை, இப்படி தில்லி தர்பாரில் கொண்டு போய் அடகு வைத்துவிட்டீர்களே!” என்று உண்மையான அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மானமும், மரியாதையும் தில்லியில் அடகு வைக்கப்படுவதைக் கண்டு ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ கொதித்துப் போயுள்ளனர்.