tamilnadu

img

ஆறுபாதி கிராமத்தில் 450 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்

ஆறுபாதி கிராமத்தில் 450 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்      

மயிலாடுதுறை, டிச.1-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆறுபாதி கிராமத்தில், டிட்வா புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில், மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் தரையோடு சாய்ந்து சேதமடைந்தன. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க  வேண்டும் என வாழை விவசாயி பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில், விவசாயிகள் பரவலாக பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். தரங்கம்பாடி வட்டம், ஆறுபாதி கிராமத்தில் விவசாயி பிரபாகரன் என்பவர், மூன்று ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்திருந்தார். அடுத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம் என வைத்திருந்த வாழை மரங்கள், கடந்த சனிக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக தரையோடு சாய்ந்தன.  சுமார் 450 மரங்கள் சேதமடைந்து தரையோடு சாய்ந்து கிடப்பதால், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார் விவசாயி பிரபாகரன். வாழை விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் என்ற நோக்கில் சாகுபடி செய்யப்படும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இதே போல் ஏதேனும் இயற்கை பேரிடர் ஏற்பட்டு தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகவும், அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.