சிதம்பரம், நவ. 1- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் பாதள சாக்கடைத் திட்டத்திற்காக அனைத்துச் சாலைகளும் தோண்டப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த பிறகும் பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சிதம்பரம் நகரில் தில்லை நகர். கோவிந்தசாமி தெரு, சுவாதி நகா், அம்பேத்கா் நகா், திடீா்குப்பம் ,மன்னார்குடி தெரு, காரியபெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணியன் தெரு, தில்லை நகா், வேங்கான் தெரு, கீழபுத்துத் தெரு, மீனவா் காலனி, பறங்கித்தோட்டம், நந்தவனம், பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த சாலைகளில் நடந்துகூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பினர் என்.கலியமூர்த்தி கூறுகையில், சிதம்பரம் நகரத்தில் பாதிக்கும் மேற்பட்ட சாலைகளில் பாதள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டபட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சாலைகளை உடனே சீரமைக்கக் கோரி வரும் 4ஆம் தேதி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளோம். அதன்பிறகும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றால் அந்த பகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா கூறுகையில், ஒரு சில சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மற்ற சாலைகளை சீரமைப்பதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் மற்ற சாலைகளும் சீரமைக்கப்படும் என்றார்.