மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகள் சாதனை
சென்னை, ஜூன் 23 - நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை 3.35 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் சுமார் 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 துவங்கி மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கடந்த ஜூன் 17 வரை, எல்கேஜி வகுப்பில் 22 ஆயிரத்து 757 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். முதலாம் வகுப்பு தமிழ் வழியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 676 பேரும், ஆங்கில வழியில் 52 ஆயிரத்து 57 பேரும் சேர்ந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 65 ஆயிரத்து 391 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால், அதிகபட்சமாக சென்னையில் 17 ஆயிரத்து 985 பேரும், செங் கல்பட்டில் 9 ஆயிரத்து 528 பேரும், திருப்பூரில் 9 ஆயிரத்து 385 பேரும் சேர்ந்துள்ளனர்.