tamilnadu

சிறுபான்மையாக இருப்போருக்குத்தான் பாதுகாப்புத் தேவை! அமைச்சர் எஸ்.ரகுபதி சாடல்

சிறுபான்மையாக இருப்போருக்குத்தான்  பாதுகாப்புத் தேவை!  அமைச்சர் எஸ்.ரகுபதி சாடல்

புதுக்கோட்டை, ஜுன் 23-  சிறுபாண்மையாக இருப்போருக்குத்தான் பாதுகாப்பு தேவையாக உள்ளது என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.  புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில், இந்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என மதுரையில் நடந்த மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருக்கிறார்.  எந்த இந்துவை வாழ விடவில்லை என்பதை அவர் விளக்க வேண்டும். அவரது சித்து வேலைகள் தமிழ்நாட்டில் பலிக்காது. பெரும்பான்மையாக இங்கே இந்துக்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவையில்லை. சிறுபான்மையாக இருப்போருக்குத்தான் பாதுகாப்பு தேவை.  இதுவரை ராமா ராமா என்றவர்களை இப்போது முருகா முருகா என்று சொல்ல வைத்திருக்கிறோம்.  அவர்கள் முருகன் வேடமணிந்தாலும், இங்கே மக்கள் நம்பமாட்டார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் மதுரையில் கூடிய மாநாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. யார் நம்மை ஆட்சி செய்தால் நல்லது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.  அரசியல் பேசக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருந்தும் அரசியல் தீர்மானங்களை மதுரையில் நிறைவேற்றியிருப்பது, பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு. நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம். இந்து சமய அறநிலையத்துறைதான் கோவில்களை சிறப்பாக நிர்வகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் கோவில்களுக்கு திருப்பணியை செய்து முடித்திருப்பது திமுக அரசு. குவாரிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆதாரத்துடன் குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.