tamilnadu

img

அமெரிக்காவின் தடையால் பெரிய பாதிப்பு அடையப் போவதில்லை - ஹூவாய் சிஇஓ பதிலடி

அமெரிக்காவில் ஹூவாய் ஸ்மார்ட்போன்களின் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கிய நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ அமெரிக்காவின் தடையால் பெரிய பாதிப்பு அடையப் போவதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதை அடுத்து, இரு நாடுகளும் கடும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் அமெரிக்கா இணைத்ததை அடுத்து கூகுள் நிறுவனம் ஹூவாய் ஸ்மார்ட்போனுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. 

இதனால், ஹூவாய் பயனாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் 90 நாட்களுக்கு இந்த தடையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு பின்னர் ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இது குறித்து ஹூவாய் நிறுவனத்தின் சிஇஓ ரென் செங்க்ஃபி கூறுகையில், "ஹூவாய் நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்துள்ள 90 நாள் தற்காலிக உரிமத்தில் பெரிய அளவு பயன் இல்லை. அமெரிக்கா எங்கள் நிறுவனத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த தடையால் நாங்கள் பெரிய பாதிப்பு அடையப்போவதில்லை. இதனால், ஹூவாயின் 5ஜி திட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இந்த 5ஜி தொழில்நுட்பத்தால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஹூவாயின் இடத்தை மற்ற நிறுவனங்கள் பிடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.