மாநிலத்தின் 4ஆவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், பல்லுயிர் பாரம்பரிய தளமாக அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் தமிழ்நாடு அரசு அறிவித்தது. தொடர்ந்து மார்ச் 2025 இல் காசம்பட்டி மற்றும் செப்டம்பர் 2025-இல் எலத்தூர் ஏரி ஆகியவை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும், இடம்பெயர்ந்து வரும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது. அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் (மட்பிளாட்கள்) மற்றும் பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024)-இன்படி, இங்கே 138 தாவர இனங்கள். 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும். தாவரங்களைப் பொறுத்தவரை, 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன. இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும்.
நாகமலை குன்று அதன் சூழலியல் மதிப்புடன் மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், மற்றும் பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் ஆகியவற்றின் சான்றுகள் அதன் வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றன. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது.
நாகமலை குன்றைப் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதன் மூலம். தமிழ்நாடு தனது பாதுகாப்பு மற்றும் நிலையான பாரம்பரிய நிர்வாகத்தில் உள்ள தலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், இந்த நிலப்பரப்பின் பல்லுயிர், சூழலியல் பங்கு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்படுகின்றன." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.