உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை உள்ளூர் அணியான இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டி எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அதிரடி வீரர் ஜேசன் ராய் 85 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் நேரத்தில் ஆட்டமிழந்ததால் கோபமுற்ற ஜேசன் ராய், ஆட்டமிழந்ததாக அறிவித்த நடுவர் தர்மசேனாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். ஜேசன் ராய் செயலால் கடுப்பான சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இரு அபராதப் புள்ளிகளுடன், போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு அபாரதப் புள்ளி பெற்ற ஜேசன் ராய் உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 3 அபாரதப் புள்ளிகளைக் கைவசம் வைத்துள்ளார். ஐசிசி விதிப்படி ஒரு வீரர் ஒரே தொடரில் 4 அபராதப் புள்ளிகளைப் பெற்றால், அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாமல் போகும். ஜேசன் ராய் மொத்தம் 3 அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளதால் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட அவருக்கு எவ்விதத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.