கோவையில் மனைவியுடன் பணிபுரியும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் தனது மனைவியுடன் கோவை, சோமனூர், நஞ்சுண்டாபுரத்தில் குடியேறி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். மனைவியும் அங்கு வேலை செய்த ஒரு இளம் பெண்ணும் தோழியாக பழகினர். அப்பொழுது ஜெகனுக்கு மனைவி மூலம் இளம்பெண்ணின் பழக்கம் ஏற்பட்டது.
இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜெகன், அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அந்த இளம் பெண்ணை விரும்புவதாகவும், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். அதற்கு இளம்பெண் சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீசர் விசாரணையில் ஜெகன் அந்த வீட்டுக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது. உடனே அவரைப் பிடித்து விசாரித்த போது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
