திருப்பூர், செப். 23 – திருப்பூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தமிழ் சிறுகதைகள் நூல் வெளியிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் 43 சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அன்வைண்டிங் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலை திருப்பூர் புது பேருந்து நிலையம் அருகில் என்சி பிஎச், என்பிடி இணைந்து நடத்தும் தேசிய புத்தகத் திருவிழா கண்காட்சியில் மூத்த பத்திரிகையாளர் வீ.பா.கணேசன் ஞாயிறன்று வெளியிட்டார். இதனை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய வீ.பா.கணேசன் கூறுகையில், மொழி பெயர்ப்புத் துறை இளைஞர் களுக்கு நல்ல வருமானம் தரும் பணியாக இன்றைய தொழில்நுட்ப உலகில் மலர்ந்துள்ளது. இதை புதிய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய பெருமன்றச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை ஏற்றார். பெருமன்றத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.