tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

கழுவேற்ற நடுகல் கண்டெடுப்பு

வேலூர், மே 20.-திருப்பத்தூரில் கழுவேற்ற நடுகல் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறுகையில், “திருப்பத்தூர் சக்தி நகர் ஏழாவது தெருவில், தீப்பாஞ்சியம்மன் கோவிலில் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட் டது. அப்போது, கோவில் வெளியே மூன்று அடி உயரமும், இரண்டு அடி அகலம் கொண்ட கழுவேற்ற நடுகல் கண்டெடுக்கப் பட்டது” என்றார்.கழுவேற்றம் என்பது ஆசன வாயில் கூரிய மரக் கழுனை ஏற்றிக் கொல்லும் தண்டனையாகும். பல்லவர் காலத்தை சேர்ந்த இந்த நடுகல் கி.பி., ஏழாம் நூற்றாண்டில், சமய பூசல் காரணமாக, இது போன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் உள்ள, முகம் மற்றும் மூக்கு பகுதிகள் சிதைந்துள்ளன. வலது கை அருள் பாலிக்கும் தன்மையோடும், இடதுகை இடது தொடையில் வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. இடது கையும் சிதைந்த நிலையில் காணப்படும் இது போன்ற பழமையான கழுவேற்ற நடுகல்லை, தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மாணவன் ரிஷி உடலுக்கு அஞ்சலி

வேலூர், மே 20-தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் முதுநிலை பட்டம் படித்து வந்த மாணவர் ரிஷி தற்கொலை செய்து கொண்டார்.வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நிக்கில் தாமஸ்-மாயா தாமஸ் தம்பதியின் மகன் ரிஷி ஜோஷ்வா. இம் மாதம் 17ஆம் தேதி தில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக நூலக கட்டிடத்தில் உள்ள வகுப் பறையில் தற்கொலை செய்து கொண்டார். அம்மாணவரின் உடல் வேலூருக்கு கொண்டு வரப்பட்டது.பிறகு, வேலூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த மாணவனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.நரசிம்மன்,ஸ்ரீதர், ஞானவேல் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.