சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் குடிநீரில் கழிவுகள் வருவதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து சனிக்கிழமையன்று (ஜூன்1)சாலை மறியலில் ஈடுபட்டனர்.சிட்கோ நகரில் உயர்அழுத்த நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நீறேற்று நிலையம் வெளியில் பொதுமக்கள் வசதிக்காக குழாய்அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் துர்நாற்றத்துடன் அழுக்கு நீர் வருவதைகண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்ட்கட்சி வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், வாலிபர்சங்க நிர்வாகி ஜே.பி.யூஜின்பர்க், வழக்கறிஞர் சாந்தகுமார், பொதுமக்கள் மன்றம் நிர்வாகி வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்கள் உள்ளே சென்று குடிநீர் தொட்டியை பார்த்தபோது, தொட்டி உடைந்த சிதைந்து காணப்பட்டது. முறையான பராமரிப்பு இன்மையே இந்த அவலநிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனைகளை உடனே சீர்செய்துவிடுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிஅளித்தனர். இதனால்போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.