tamilnadu

img

சிறந்த திருநங்கைக்கான விருதினை பெற்றார் சந்தியா தேவி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதலமைச்சர் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது  கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு கிடைத்துள்ளது.
சந்தியா தேவி  பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு தன் தனித் திறமையால் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார். 
வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வரதட்சணை தடுப்பு, சமூக நலத் திட்டங்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல திருநங்கைகளுக்கு சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுக்கிறார். 
தோவாளையைச் சார்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அதுமட்டில்லாமல் 8 வயது மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையைத் தத்தெடுத்துப் பராமரித்து வளர்த்து வருகிறார்.