சென்னை, ஜூலை 17- ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 7850 வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் புதனன்று (ஜூலை 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.முருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் பரிமளா, எஸ்.சுவர்ணம், எஸ்.ஜெகவீரப்பாண்டிய கட்டபொம்மன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கேசவன், இந்தி ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.சுபந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ. 2000 மட்டுமே வழங்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும்’ என்றார். முன்னதாக பொது மக்களிடம் பெறப்பட்ட ஆதரவு கையெழுத்துக்களை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியிடம் வழங்கப்பட்டது.