விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுத்திய கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு. நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப் பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை.
கரீஃப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுப்பதில் தளர்வு ஆணைகள் கோரி
மாநில அரசு, 07.10.2025 அன்று 5 ஒப்பந்ததாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு வழங்கியது என்றும், 16.11.2025 நிலவரப்படி ஒப்பந்ததாரர்கள் 1,760 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, FoRTrace இணையதளத்தில் 123 மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர் என்றும், இதில் பதிவேற்றப்பட்ட 77 மாதிரிகளில், இதுவரை 33 மாதிரிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், ஒரு மாதிரி முடிவை அறிவிக்க கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகின்றன என்பதை குறிப்பிட்டு, இந்தமுறை காலதாமதத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து பெறப்படும் கண்டுமுதல் அரிசியை நகர்வு செய்திடவும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சம்பா (ரபி) பருவ நெல் கொள்முதலுக்குத் தேவையான இடத்தினை ஏற்படுத்திடவும் அதிக அளவு செறிவூட்டப்பட்ட அரிசி அரவைக்குத் தேவைப்படுகின்றன.
எனவே, தற்போதுள்ள 25 கிலோ FRK சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும் என்றும், மாதிரி தொகுதி அளவை 10 MT-இலிருந்து 25 MT ஆக BIS தரநிலைகளுக்கு ஒரு தொகுதிக்கு 500 மூட்டைகள்) ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்றும், மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்து, இடப்பற்றாக்குறை நீங்கி, முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறையும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இது தொடர்ச்சியான நெல் அரவைக்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
