சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும்.
அதனடிப்படையில், இந்தாண்டும் புத்தக கண்காட்சி சென்னையில் ஜனவரி 6 முதல் 23 வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா கட்டுபாடு காரணமாக புத்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கபட்டுள்ளது. எனவே, புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று விற்பனையாளர்கள், பதிவாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதனையடுத்து, சென்னையில் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.