சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி மதிப்பில் புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். இந்த புத்தக பூங்காவில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.29.80 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
புத்தக பூங்கா குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இனி, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்துக்கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் சென்னை புத்தகப்பூங்காவைத் தொடங்கியுள்ளோம்!
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.