tamilnadu

img

எங்கள் இதயங்களில் வாழ்கிறீர்கள் தோழரே...

இந்திய கூட்டணி அரசியல் சகாப்தத்தின் நாயகன் என்று புகழப்பட்ட தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் நினைவு நாள் இன்று.  

பஞ்சாப் மாநிலத்தில் 1916-ம் ஆண்டு விடுதலைப் போராட்ட பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், இளம்வயதிலேயே நாட்டின் விடுதலைக்காக போராடத் துவங்கினார். மாவீரன் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் துவக்கிய நவஜவான் பாரத் இயக்கத்தில் தன்னுடைய 14-வது வயதில் அவர் இணைந்து பணியாற்றினார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்த அவர், ஒருஅப்பழுக்கற்ற, முன்னுதாரணமான கம்யூனிஸ்ட்  தலைவராக மிளிர்ந்தவர். இளம் வயதிலேயே சிறை சென்ற அவர், நாட்டின் விடுதலைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைவாசம் செய்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாப் பகுதியில் மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும்பாதுகாக்க இவரும் கம்யூனிஸ்ட் இயக்கமும் மேற்கொண்ட பணி மகத்தானது. 

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் தோழர் சுர்ஜித்தும் ஒருவர். கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியவர். காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அயர்வற்ற போராட்டத்தை நடத்தியுள்ளார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக பணியாற்றியவர். சோவியத் யூனியன் தகர்வைத் தொடர்ந்து கியூபாவிற்கு நேசக்கரம் நீட்ட இந்தியா முழுவதும் உணவு தானியங்களை சேகரித்து, அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட பணியில் அவர் முன்னணி தளகர்த்தராக திகழ்ந்தார்.மதவெறி பாஜக  பரிவாரம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் சக்திகளையும் இணைக்கிற மையப்புள்ளியாக விளங்கியவர் தோழர் சுர்ஜித். மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் அவர் ஆற்றிய பணிகள், வகுத்த  வியூகங்கள் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பக்கங்களாகும். மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்க, மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச குடியரசாக இந்திய திருநாட்டை உருவாக்க அவரது நினைவு நாளில் உறுதிகொள்வோம்.

இன்று (ஆகஸ்ட் 1) சுர்ஜித் நினைவு நாள்