நெடு நேரம் காத்துக் கிடந்து அதிகாரிகளும் ஏமாந்தனர்
பெரம்பலூர், மார்ச் 9- உலக மகளிர் தினம் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் திங்கட்கிழமை அன்று பெரம்பலூர் அரசு அலுவலகங்களில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் ஆலத்தூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர் புதிய கூட்டுறவு சங்கத்தை திங்கள் காலை 10 மணிக்கு ஆட்சியர் வே.சாந்தா துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு, அவரும் ஒப்புதல் தந்திருந்தார். இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள், மகளிர் ஆகியோர் இணைந்து திறப்பு விழா ஏற்பாடுகளை மும்முரமாக செய்தனர். காலை 9.30 மணிக்கு ஆட்சியர் வே.சாந்தாவை வரவேற்க பொதுமக்கள் பூச்செண்டுடன் காத்திருத்தனர்.
அவர்களுடன் அரசு கால்நடைத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் காத்திருந்தனர். ஆர்வமுடன் காத்துக் கிடந்தவர்களுக்கு 10 மணியும் கடந்தது. பின்னர் 11, 12, 1 மணி என கடந்த நிலையில் ஆட்சியர் அதோ வருகிறார், இதோ வருகிறார் என காத்திருந்த மக்களும், அதிகாரிகளும் சோர்ந்து போயினர். இதனால் மக்கள் ஆர்வம் குறைந்து ஆரம்பமே இப்படியா, வர முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை, அதை தகவலாக சொல்லியிருக்கலாமே என ஆதங்கப்பட்டனர். பெரும்பாலானோர் விவசாயத் தொழிலுடன் உப தொழிலாக கால்நடை வளர்ப்பிலும், ஈடுபட்டுள்ளதால் அவற்றை மேய்ச்சலுக்கு விட சிரமப்பட்டனர். மேலும் மதியம் 1 மணி ஆகிவிட்டதால் அவர்களே சங்கத்தை திறந்து வைத்தனர். மகளிர் தின விழாவை பெண் ஆட்சியரே அலட்சியப்படுத்திய சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு காட்டும் அக்கறையினை மாவட்ட மக்களிடம் செலுத்த மறுப்பதால் கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது என்கிற காந்தியின் கொள்கையையும் மறந்து வருகிறார் என மக்கள் நொந்து கொண்டனர்.
(ந.நி.)