திருப்பூர், மார்ச் 7 - ஏப்ரல் 5ஆம் தேதி தில்லியில் நடக்கவிருக்கும் 5 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து விசைத்தறி தொழிலாளர்களை திரளாக பங்கேற்கச் செய்வது என தமிழ்நாடு விசைத்தறித் தொழிலாளர் சம்மேளனத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனக் கூட்டம் திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் செவ்வாயன்று மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க இலவச மின்சார அளவை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அமல்படுத்துவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனம் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பாஜக அரசுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி தில்லியில் நடக்கவிருக்கும் தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் என 5 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து விசைத்தறித் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்பது எனவும், இதனையொட்டி நடத்தப்படும் நடைபயணப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்துவது, சட்ட, சமூகப் பாதுகாப்பு இல்லாமல் மிகக்குறைந்த வருமானத்தில் பணி புரியும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட சட்ட உரிமைகளை அமலாக்க வேண்டும். இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும், குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று மாநிலக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் விசைத்தறித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து பட்டினியில் பரிதவிக்கின்றனர். எனவே ஒன்றிய, மாநில அரசுகள் உரிய தலையீடு செய்து இந்த தொழிலைப் பாதுகாக்க வேண்டும். கடும் சுரண்டல் பிடியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அணிதிரட்டி சங்க அமைப்பை பலப்படுத்துவது என சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.