tamilnadu

img

ஆளுநர் உரை துளிகள் .......

மனுக்கள் மீது தீர்வு

நடப்பாண்டில், ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ், இதுவரை பெறப்பட்டுள்ள 17.70 லட்சம் மனுக்களில், 16.28 லட்சத்திற்கும் மேலான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்திட, கண்காணிப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பரப்புரை கழகம்

உலகெங்கும் விரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டினைப் பேணிக்காக்கவும், ‘தமிழ்ப் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அயலகத் தமிழர்களுக்கும் தாய்த் தமிழ்நாட்டிற்கும் ஒரு பாலமாக இயங்குவதற்கும், அவர்களின் நலனைக் காப்பதற்கும் அயலகத் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் ஜனவரி 12 ஆம் நாள் ‘அயலகத் தமிழர் தினமாக’அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு உதவிக்கரம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினாலும் உணவுப் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 174 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை மாநில அரசு வழங்கியது. பொருளாதார நெருக்கடி காரணமாக 216 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை முகாம்களில் தங்க வைத்து, தேவையான உணவு, உடை, அடிப்படை வசதிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. 

மீன்பிடி உரிமை பாதுகாப்பு

மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இந்த அரசு, அவர்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 5 புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் பணிகளும், 3 மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுப் பணிகளும் மொத்தம் 982.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரம்பரியமான கடற்பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 232 தமிழ்நாட்டு மீனவர்கள், இந்த அரசின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று வரை, பத்து மீனவர்கள் இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்படவில்லை.  106 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இன்னும் உள்ளன. இலங்கைக் கடற்படையினர்  நமது மீனவர்களை கைது செய்வதைத் தடுக்கவும், மீனவர்களின் உடைமைகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 

மக்களைத் தேடி மருத்துவம்

 ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், இதுவரை 1.01 கோடி மக்கள் தங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர். ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’  திட்டத்தால் மாநிலமெங்கும் உள்ள 679 மருத்துவமனைகளில் இதுவரை  1.35 லட்சம் விபத்துக்குள்ளானவர்களுக்கு 120.58 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகள் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் போதிய மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்து, கொரோனா பெருந்தொற்றால் எதிர்வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 

அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கு நடப்பாண்டில்  1,430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 7,200 புதிய வகுப்பறைகள் 1,050 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.  பாவேந்தரின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ் இலக்கியத்திலுள்ள சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க ஒரு சிறப்பு நல்கையை தமிழ்நாடு அரசு வழங்கும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் நாள்தோறும்  1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

உயர் கல்வியில் பெண்கள் அதிகரிப்பு

‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தால்  கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்புக் கல்வியாண்டில், கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவியரின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

பசுமை காலநிலை நிதியம்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. காலநிலை மாற்றம் குறித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கிட, முதலமைச்சர் தலைமையில் பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னோடி முயற்சியாக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பெருந்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ‘பசுமை காலநிலை நிதியத்தை’அரசு அமைத்துள்ளது.

மதுரையில் ரூ.600கோடியில் டைடல் பூங்கா

சென்னை தவிர பிற நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திட உகந்த சூழலை உருவாக்க, ஏழு இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தின் மூன்றாவது டைடல் பூங்கா மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

பன்னாட்டு விமானநிலையம்

  காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது.  இது நமது மாநிலத்தின் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்வதோடு, அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும்.

கபடி, சிலம்பம் விளையாட்டு போட்டி

மாநிலம் முழுவதும் விளையாட்டுத் திறனை ஊக்குவித்திட ‘முதலமைச்சர் கோப்பைக்கான’ போட்டிகளை அரசு அறிவித்துள்ளது. இப்போட்டிகளில், பள்ளி கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில், ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாநிலமெங்கும் நடத்தப்பட உள்ளன.