tamilnadu

img

தோழர் கே.தங்கவேல் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னுதாரணமான மக்கள் ஊழியர்

திருப்பூர், செப். 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த மூத்த தலைவர் தோழர் கே.தங்கவேல் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை திருப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்று கே.தங்கவேலை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், மகாத்மா காந்தி சிலை அருகில் கே.தங்கவேல் உருவப்படம் மலர் அலங்காரம் செய்யப்பட்டு செங்கொடியுடன் வைக்கப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர், திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மறுமலர்ச்சி திமுக மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திராவிடர் கழகத் தலைவர் ஆறுச்சாமி, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சையது முஸ்தபா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் கே.தங்கவேலின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.

தோழர் கே.தங்கவேல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் செயல்பட்டவர். மாற்றாரையும் ஈர்க்கும் மனிதநேயப் பண்பாளர்,  கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக - மக்கள் ஊழியராக சிறப்புடன் செயல்பட்டவர். பொது வாழ்வில் இருப்போருக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். மிகவும் சிக்கலான இன்றைய கால கட்டத்தில் அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, திருப்பூருக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், கே.ரங்கராஜ், ஆர்.குமார், ச.நந்தகோபால், திமுக தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ச.பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ரவி, மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம். ஆர்.பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வே.முத்துராமலிங்கம், கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், மதிமுக மு.சம்பத், மனோகரன் மற்றும் முக்கிய தொழில் பிரமுகர்கள் பி.வி.எஸ். முருகசாமி, ஆர்.ஏ.செல்வராஜ் உள்பட அனைத்துக் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் நன்றி கூறினார். 

;