அமைதியான முறையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீதும் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கவும், மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவும், பொதுத்துறை பாதுகாப்பு, விவசாய விளைப் பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் ஒன்றரை மடங்கு விலை, 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்குதல், அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி உயர்வை கைவிடுதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டு 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர், மாணவர், இளைஞர் உள்ளிட்ட மக்கள் அமைப்புகளின் சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.
தமிழகத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பி.ஹெச்.இ.எல், சேலம் ஸ்டீல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பவர் கிரிட் கார்ப்பரேஷன், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள், வங்கி, காப்பீடு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்சார வாரியம் போன்ற துறைகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், கோயம்புத்தூர், திருவள்ளூர், மதுரை புறநகர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களிலும் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, ஐ.சி.டி.எஸ் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கணிசமாக பங்கேற்றனர்.
தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும், நகரங்கள், பேரூர்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த மறியல் போராட்டத்தில் ஒருசில இடங்களில் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது. குறிப்பாக, விழுப்புரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைதியான முறையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசாரின் இந்த ஜனநாயக விரோத அத்துமீறல்களை வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.