ஊராட்சி செயலாளரை கண்டித்து சிபிஎம் முற்றுகை போராட்டம்
நாகப்பட்டினம், ஆக. 11- நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிம் வடகரை - ஏனாநல்லூர், கோட்டூர் ஊராட்சி செயலாளர் எஸ். சசிகுமாரின் ஊழல் முறை கேடு, பெண் ஊழியரிடம் தகாத வார்த்தை பயன்படுத்தி பேசுவது போன்றவற்றை கண்டித்தும், ஊராட்சி செயலாளரை பணிநீக்கம் செய்வது, ஊராட்சியை குப்பைகளற்ற ஊராட்சியாக பராமரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமருகல் ஒன்றியக்குழு சார்பில், ஏனாநல்லூர், கோட்டூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பி.எம். லெனின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர், வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை இரண்டு வாரங்களில் சரி செய்வதாக திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் வாக்குறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.