tamilnadu

img

புதுக்கோட்டை மாவட்ட கரும்பு சாகுபடி பகுதிகள் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை வசம் ஒப்படைத்திடுக... கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கரும்பு சாகுபடி பகுதிகளை தனியார் ஆலைக்கு மாற்றியதை ரத்து செய்து பொதுத்துறையான தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு மாற்றவலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் குரூம்பூரில் இயங்கி வந்த இ.ஐ.டி. பாரி தனியார் சர்க்கரை ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இ.ஐ.டி பாரி ஆலை வசமிருந்த 42 பிர்க்காவும் ஏற்கனவே அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை வசம் இருந்தவை. 1997-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இஐடி சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டபோது அந்தப்பகுதிகள் ஒப்படைக்கப்பட்டன. தற்பொழுது இஐடி பாரி ஆலை மூடப்பட்ட நிலையில் அதை மீண்டும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிடமே ஒப்படைப்பதே முறையான நடவடிக்கை ஆகும். ஆனால், மேற்படி 42 பிர்க்காவில் 14 பிர்க்காவை மட்டும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்து, மீதமுள்ள 28 பிர்க்காவை திருச்சி மாவட்டம் காட்டூர் கோத்தாரி ஆலைவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க, முழுக்க புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். கோத்தாரி ஆலையைவிட அண்ணா சர்க்கரை ஆலை 10 கிலோ மீட்டர் முதல் 60 கிமீ வரை தூரம் குறைவு. கோத்தாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பலகோடி ரூபாய்களை நிர்வாகம் தொடர்ந்து வழங்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் பொதுத்துறையான அறிஞர்அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 2500 டன் அரைக்கும் திறன்கொண்ட பொதுத்துறையான  அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

எனவே, மாநில சர்க்கரை துறைஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கோத்தாரி ஆலைக்கு ஒதுக்கியுள்ள 28 பிர்க்கா கரும்புப்பகுதிகளையும் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கே மீண்டும் ஒதுக்கீடு செய்யவேண்டும். மாநில சர்க்கரை துறை ஆணையம் கோத்தாரி ஆலைக்கு ஒதுக்கியுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இ.ஐ.டிபாரி ஆலை நிர்வாகம் விவசாயி களுக்கு வழங்க வேண்டிய சுமார் 60 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவேண்டும்.கரும்பு கட்டுப்பாடு உத்தரவு 1966 பிரிவு 5ஏ படி சுமார் ரூ.8.62 கோடி லாபபங்குத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ.ஐ.டி பாரி ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைமட்ட செயலாளர் எஸ்.நாராயணசாமி தலைமைவகித்தார். இஐடி பாரி சர்க்கரை ஆலை மட்ட செயலாளர் எஸ்.பீமராஜ்முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்ட த்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் பேசினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துதமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கமாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

பொதுத்துறையை  கைகழுவும் அரசு
ஆர்ப்பாட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய டி.ரவீந்திரன், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் தனியார் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து வருகிறது. அதேபோல, மாநில அரசும் தனது நிறுவனத்திடம் இருந்த பொதுத்துறையான அறிஞர் அண்ணா சர்க்கரைஆலையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு புதிய சர்க்கரை ஆலை வரும் பொழுது அந்த மாவட்டத்தை சேர்ந்தகரும்புப் பகுதிகளை புதிய ஆலையுடன் இணைப்பது தவறில்லை. அதேநேரத்தில் அந்த ஆலை மூடப்பட்டநிலையில், ஏற்கனவே இணைந்திருந்த ஆலையுடன் இணைப்பதுதானே சரியான நடவடிக்கையாகும். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கரும்பு சாகுபடி பகுதிகளையும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையுடன் இணைப்பதுதானே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். எனவே, உடனடியாக மாநில அரசு இதில் தலையிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 42 பிர்க்காவையும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையுடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இஐடி பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.60கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி சட்டமன்றத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவோம் என்றார்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சங்கத்தின் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.