tamilnadu

தருமபுரியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,600 பேர்

தருமபுரி, ஏப்.17- தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரத்து 600 பேர் ஈடுபடுகின்றனர். தருமபுரியில் நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி 306, பாலக்கோடு 262, பென்னாகரம் 291, அரூர் 299, பாப்பிரெட்டிப்பட்டி 314 மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 315 என மொத்தம் 1,787 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 14,67,904 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், கட்சி மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


பொதுத்தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் வேட்பாளர்களின் பிரச்சாரம் செவ்வாயன்று (ஏப்.16) நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.18) வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில்உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளன்று, காவலர்கள் 1,348 பேர், கேரள மாநில காவல்துறையினர் 480 பேர், சிறப்புக் காவல் படையினர் 350 பேர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத் துறையினர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சுமார் 130வாகனங்களில் அந்தந்த வாக்குப் பதிவுமையங்களுக்கு புதனன்று அனுப்பி வைக்கப்பட உள்ளன.

;