வேலூர் தலைமை தபால் நிலையத்தில்
வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
வேலூர், மே 5-வங்கிக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.கிராமப்புறங்களில் வங்கி சேவையை அதிகரிக்கஅஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்வங்கிக் கணக்கு மத்திய அரசால் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 568 தபால்நிலையங்களில் இந்த சேவை 540 தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டு இதுவரை4 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர்.இந்நிலையில் வேலூர்தலைமை தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.அஞ்சலகக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். முதுநிலை தபால் அலுவலர் கோமல்குமார், முதுநிலை மேலாளர் ஓம்கார்குருஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். இதில் தபால் நிலையங்களில் கணக்கு வைத்துள்ளவர்கள் சேரலாம். கணக்கு இல்லாதவர்கள் ஆதார் எண், செல்போன் எண் மூலம் புதிய கணக்கு தொடங்கலாம். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. புகைப்படம், முகவரிச் சான்று உள்ளிட்ட எந்தப் படிவமும் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் பராமரிக்கத் தேவையில்லை.மின்கட்டணம், செல்போன் கட்டணம், காப்பீட்டு பிரீமியம், கடன் தொகை என வங்கி மூலமான பணப்பரிமாற்றங்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.இருப்புத் தொகைக்கு ஏற்ப தினசரி 4 சதவீத வட்டி கணக்கிட்டு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, சமையல் எரிவாயு மானியம் போன்றவற்றையும் இந்தக் கணக்கின் மூலம் பெற முடியும். கணக்குத் தொடங்கியவர்களுக்கு க்யூஆர் கோடு அடங்கிய அட்டை வழங்கப்படும்.அதன்மூலம் அவர்கள் எந்த அஞ்சலகத்தில் இருந்தும் அவர் கணக்கில் பணம் செலுத்தலாம், பணம் பெறலாம். அந்தந்த பகுதி தபால்காரரே வீட்டிற்கு வந்து வங்கி சேவையும் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
வறட்சியால் பாதிப்பு விவசாயிகளுக்கு
ரூ.10 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வேலூர், மே 5-வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த பல மாதங்களாக மழை இல்லை. பாலாறு மற்றும் ஏரி, குளங்கள், நீர் நிலைகள் வறண்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பல இடங்களில், 1,500 அடி ஆழம் வரை போர் போட்டாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. கடும் வெயிலால் பல இடங்களில் பயிர்கள் காய்ந்து விட்டன. காவேரிப்பாக்கம் அடுத்த பல்வேறு பகுதிகளில், தண்ணீரின்றி ஆயிரக்கணக்கான தென்னை, 5,000 ஏக்கருக்கு மேல், நெல் வயல்கள் காய்ந்து விட்டன.இப்பகுதி விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர்க்கடனை, அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட விவசாயிகள், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், “கடுமையான வறட்சியால், வேலூர் மாவட்டத்தில், நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, தென்னை, மரங்கள் கருகி வருகின்றன. இதை, வேளாண் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், தேர்தல் நடத்தை விதிமுறையைக் காரணம்கூறி பார்வையிட வர மறுக்கின்றனர். வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தும் நடவடிக்கை இல்லை. பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு வழங்கவில்லை. வறட்சியால் பாதித்த விவசாய குடும்பங்களுக்கு மாதந்தோறும், 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பாதித்த நிலங்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
விஐடியில் பயிற்சி முகாம்
வேலூர், மே 5கருவிமயமாக்கலின் பகுப்பாய்வு குறித்த பயிற்சி முகாம் வேலூர் விஐடிபல்கலைக்கழகத்தில் மே 13ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. பட்டதாரிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விஐடி பல்கலைக்கழகத்தின் டிபிஐ எனப்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் மையம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து புதிய உற்பத்திக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி, புதியதொழில்முனைவோர்களை உருவாக்கபொறியியல், அறிவியல் பட்டதாரிகளுக்குஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தேவையான உதவிகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறது.அதன்படி, டிபிஐ மையம் கருவிமயமாக்கலின் பகுப்பாய்வு தொடர்பான பயிற்சி முகாம் மே 13 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.